பின்பற்றுபவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

ஆதி நாராயணராவ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - பாகம் 1



          இசை அமைப்பாளர் ஆதி நாராயணராவ் அவர்கள் 1946–ல் “Varudhini” என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மொழி படங்களில் இசை அமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார். இசை அமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும். ஸ்டுடியோ அதிபராகவும் ஜெயித்தவர். இவர் நடிகை அஞ்சலி தேவியின் கணவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என்னிடம் யாராவது உங்களுக்கு பிடித்த ஐந்து இசை அமைப்பாளர் பெயர்களை கூற சொன்னால் கூட இவர் பெயர் அதில் இருக்கும். இவர் இசை அமைத்த படங்கள் எண்ணிக்கையில் முப்பதை தாண்டுமா என்பது சந்தேகம். ஆனால் தரத்தில் எல்லாமே மாணிக்கங்கள.
           ஆதி நாராயண ராவ் இசையில் எப்போது பி.சுசீலா பாடினார் என தேடிய போது  “Anna data” ( 1953 ) என்ற தெலுங்கு படம் கிடைத்தது. அதில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பளித்தார் ஆதி நாராயண ராவ் அவர்கள். ஹிந்துஸ்தானி இசையில் நல்ல ஞானம் உள்ள ஆதி நாராயண ராவ் அவர்கள் இசையில் “பிரளயபயோதி ஜலே”  என்ற ஜெயதேவ அஷ்டபதி தான் இவர் இசையில் பாடிய முதல் பாடலாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வயதிலேயே என்ன ஒரு இசை ஞானம்!!. கிளாசிக்கல் இசையில் அசத்தி இருப்பார் பி.சுசீலா. பி.சுசீலாவின் ஆரம்ப காலத்தில் இப்பாடல்கள் அவர் திறமையையும் குரல் வளத்தையும் மெருகேற்ற  உதவின. அப்போது கதாநாயகிகளாக நடித்த பெரிய நடிகைகளில் அஞ்சலி தேவிக்கு தான் முதலில் பி.சுசீலா பின்னணி பாடினார் என நினைக்கிறேன்.  


    அதை தொடர்ந்து அவர் இசை அமைத்த எல்லா படங்களிலும் அவர் பி.சுசீலாவுக்கு வாய்ப்பளித்தார். அவர் இசையில் அதிகமாக பாடியவரும் பி.சுசீலா அவர்கள் தான்.
    மிக அருமையான பாடல்களையும் மிக சவாலான பாடல்களையும் இவர் இசையில் பி.சுசீலா அதிகமாக பாடி இருக்கிறார். ஒரு பாடகி வளர்ந்து வரும் நேரத்தில் அவர் குரலை பண்படுத்த தரமான பாடல்கள் அமைய வேண்டும். நல்ல இசை ஞானம் உள்ளவர்களிடம் பணி புரிய வேண்டும். இவை இரண்டும் பி.சுசீலா விஷயத்தில் சரியாக அமைந்தன. இயற்கையாகவே கிடைத்த இனிய குரல் வளத்தை அப்பாடல்கள் மேலும் மெருகேற்றின. அதில் ஆதி நாராயண ராவ் அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
    . சவாலான பாடல்கள் என்றால் ..... !!!!?
இப்போதும் வட இந்திய ரியாலிட்டி ஷோக்களில் Final களில் பாடப்படும் பாடலில் ஒன்று  “Kuhoo Kuhoo bole koyalia”.  இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆதி நாராயண ராவ் அவர்கள். இப்பாடலை முதலில் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பாடியவர் பி.சுசீலா அவர்கள். பின்னர் தயாரிப்பாளர் விருப்பத்துக்காக தெலுங்கில் மட்டும் ஜிக்கி அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்தது. தயாரிப்பாளரின் முந்தைய சூப்பர் ஹிட் படமான  “அனார்கலி”யில் “ராஜசேகரா” என்ற சூப்பர் ஹிட் பாடலை ஜிக்கி பாடி இருந்ததால் இப்பாடலை ஜிக்கியை வைத்து பாட வைக்க விரும்பினார் தயாரிப்பாளர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழில் “தேசுலாவுதேதேன் மலராலே” என ஒலிக்கும் இந்த பாடலை பாடியவர்கள் கண்டசாலா மற்றும் பி.சுசீலா அவர்கள். எத்தனை அருமையான பாடல்!. எத்தனை சங்கதிகள்.!! ஒரு டூயட்டுக்குள் இத்தனை சங்கதிகளை அழகாய் பயன்படுத்த ஆதி நாராயண ராவால் மட்டுமே முடியும்.
       இது தான் சவால் என்றால் இதையும் மீறிய ஒரு சவாலை “மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்” என்ற படத்தில் அளித்தார். ராஜ சபையில் காதலனை தேடும் காதலியின் பாடல்.. எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயியில் துவங்கும் ஆலாப்.. அதில் கொஞ்சம் வலியும் தேடலும் இருக்க வேண்டும்.. அந்த வலியை கூட்டிக்கொண்டே போகும் படி ஒன்றுக்கு பின் ஒன்றாய் மூன்று ஹம்மிங்குகள்.. .. திடீரென காதலனை கண்டதும் குரலில் பொங்கும் சந்தோஷம், அருவியாய் கொட்டும் சங்கதிகள் என அந்த ஹம்மிங்களிலேயே ஆயிரம் வித்தை காட்டியிருப்பார் பி.சுசீலா அவர்கள். இந்த குரலில் தான் அந்த வித்தைகளை வர வைக்க முடியும் என ஆதி நாராயண ராவுக்கும் தெரிந்தே இருக்கிறது. அதை தொடர்ந்து “வருமோ இது போல் ஒரு நாள்” என பல்லவியுடன் பி.சுசீலாவின் குரலால் நம்மை மயங்க வைக்கும் ஒரு நடனப்பாடல் . இறுதியில் வட இந்திய  நடனப்பாடல்களில் இடம் பெறும் ஒரு அழகிய தில்லானா, அதுவும் கிட்டத்தட்ட இரு நிமிடங்கள் ஒலிக்கும். “தரிகிட தக..” என துவங்கும் அந்த தில்லானாவில் என்ன இல்லை ?! ..நிறைய கஷ்டமான  ஜதிகள், ஸ்வரங்கள், ஆலாபனைகள் என ஒரே இசை மழை தான்!! அதில்  “கிடதித்தா கிடதித்தா” என வரும் இடத்தில் அஞ்சலி தேவியின் நடனத்தில் தெரியும் குறும்பு கூட பி.சுசீலாவின் குரலிலேயே வந்திருக்கும். இப்பாடலை மேடைகளில் பாடும் தைரியம் இன்னும் யாருக்கும் வரவே இல்லை போலிருக்கிறது.. நான் யாரும் பாடி கேட்டதில்லை..  
     அதே படத்தில் “ஜல்ஜல் ஜல் சலங்கை ஜதி நாதமே நாட்டியம்” என ஒரு நடனப்பாடல் தனிப்பாடலாக அமைந்தது. “நாட்டியமே ஜீவிதம்” என முடியும் நேரங்களில் அருவி போல் விழும் சங்கதிகளின் அழகினை கேட்டு ரசியுங்கள். பாடல் முடிந்ததும் இதைப்போலவே ஆலாபனைகள், ஜதிகள், ஸ்வரங்கள் என தொடரும் இசை மழையில் கண்டசாலா அவர்களும் சேர்ந்து கொள்வார். மிக கஷ்டமான அப்பாடலை இருவரும் அனுபவித்து பாடி இருப்பார்கள். இப்படி பல பாடல்களை குறிப்படலாம்..

       இனி கொஞ்சம் விளக்கமாக ஆதி நாராயண ராவ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களை பற்றி பார்ப்போம். ஆதி நாரயண ராவ் தெலுங்கில் தான் அதிக படங்களுக்கு இசை அமைத்தார். சில படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. காரணம் அஞ்சலி தேவிக்கு தமிழிலும் தெலுங்கிலும் மார்க்கட் ஒரே போல் சீராக இருந்தது தான். அதனால் சில படங்கள் தமிழிலும் அவர் இசையில் வெளிவந்தன.
    ஏற்கனவே சொன்னது போல் “Anna data” படத்தில் “ப்ரளய பயோதி ஜலே” என்ற அருமையான அஷ்டபதி பி.சுசீலாவின் குரலில் இடம் பிடித்தது. அதை தவிர “jaya jagadeesa”, “ontari vadane bhama “ என இன்னும் இரு இனிமையான பாடல்கள் இடம் பிடித்தன. அதை தொடர்ந்து 1955-ல் “அந்த நாள் தான் இதடா ஆருயிரே என் ராஜா” என்ற அருமையான பாடலையும் பாடும் வாய்ப்பளித்தார். இதே பாடல் தெலுங்கில் “Anda Chandalagani”  என ஒலித்தது. இதற்கு திரு.விக்கி எழுதிய அருமையான விளக்கத்தை படியுங்கள்..( விளக்கம் ) இதை தொடர்ந்து மிக பெரிய வெற்றிப்படமான “மணாளனே மங்கையின் பாக்கியம்” என்ற படத்திலும் ஆதி நாராயண ராவின் இசை கொடி கட்டி பறந்தது. எல்லா பாடல்களுமே ஹிட்.. “அழைக்காதே நினைக்காதே”, “தேசுலாவுதே தேன் மலராலே”. “கண்ணே நீ வாடா,  “நீயே என் வாழ்வின் நிதி ஆகுமேஜகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா”, “ தேவா தயை புரிய வா, “ஜோரான பொம்மை பாருங்க” எல்லாமே மிக அருமையான பாடல்கள். மூன்று காதல் பாடல்கள், ஒரு சோக தாலாட்டு., இரு பக்தி பாடல்கள், ஒரு ஜனரஞ்சக பாடல் என சுசீலாவின் குரலிலேயே பல வெரைட்டி கொடுத்திருப்பார் ஆதி நாராயன் ராவ் அவர்கள். இந்த படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. சுவர்ண சுந்தரி என்ற அப்படத்திலும் பி.சுசீலா ஏழு பாடல்கள் பாடினார்.
            1959-இல் வெளிவந்த “அதிசய பெண்” படம் ஆஷா என்ற ஹிந்தி படத்தின் டப்பிங் என நினைக்கிறேன். “ஈனா மீனா டிகா” பாடல் தமிழில் பி.சுசீலாவின் குரலில் அதே துள்ளலுடன் ஒலித்தது. உன்ன நெனச்சாலே கிளிகிளுங்குது மச்சானே” என ஒரு கிராமிய மணம் தவழும் பாடலும் இனிமையாக ஒலித்தது. “எப்போ வருவாரோ” என ஒரு வித்தியாசமான பாடலுடன் “கலங்காத உள்ளமும்”. “வெண்ணிலவே ஓ வெண்ணிலாவே” போன்ற பாடல்களும் இடம் பெற்றன. ஹிந்தியில் ஆஷாவும் லதாவும் பாடிய பாடல்களை தமிழில் பி.சுசீலாவே பாடினார்.
       1960-இல் வெளிவந்த “அடுத்த வீட்டு பெண்” மிகப்பெரிய ஹிட் ஆனது. தெலுங்கில் 1953-ல் வெளிவந்த “பக்கிண்டி அம்மாயி” (இசை: அஸ்வத்தமா) என்ற திரைப்படம் தமிழில் “அடுத்த வீட்டு பெண்” ஆக ரீமேக் செய்யப்பட்டது. அவர்கள். அழுது வடியும் ரோல்களில் நடித்த அஞ்சலி தேவி ஒரு மகிழ்ச்சியான ரோலில் நடித்தார். இப்படத்தில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்களுக்கும் இசை அமைத்தார் ஆதி நாராயண ராவ் . “மன்னவா வா வா”, “மலர்க்கொடி நானே” பாடல்களை கேட்டாலே புரியும்.. இவ்விரு பாடல்களும் காலத்தையும் கடந்து ஜெயித்த பாடல்கள் என்றால் மிகை இல்லை. அவை தவிர “ப்ரேமையின்ஜோதியினாலே”. “கன்னித்தமிழ் மணம் வீசுதடி”, “எனக்காக நீயே ராஜா” போன்ற பாடல்களும் சிறப்பாக அமைந்தன. எஸ்,ஜானகி குரலில் ஒரு ஜப்பானிய மொழி பாடல் கூட படத்தில் இடம் பெற்றது.

     அதே வருடத்தில் “Runanu bandham” என்ற தெலுங்கு படத்திலும் அவர் இசை சிறப்பாக அமைந்தது. “Runanu bandham” படத்தில் “lokala nele challanayya” என்ற ராமர் புகழ் பாடும் பக்தி பாடல் அருமையாக இருக்கும். “Nindu Punnami nelaஎன்ற பாடலை பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடி இருப்பார்கள். கதாநாயகி அஞ்சலிதேவி சோகமாக பாடுவது பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.  இப்படத்தில் “தீபாவளி பண்டிகை” கொண்டாடும் “Vachindi Deepavali”  பாடலும் குறிப்பிட படத்தக்கது. இவை தவிர “RavelaAndala bala, “andalu chinduganu” மற்றும் “ehe ehe neelu thodali” பாடல்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்கள்.
            இதை தொடர்ந்து “ஸ்வர்ண மஞ்சரி” என தெலுங்கிலும் “மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்”  என ஒரு இசை பிரளயத்தை கொடுத்தார் ஆதி நாராயண ராவ் அவர்கள். நிறைய பரீட்சார்த்தமான பாடல்கள் என்றால் மிகை இல்லை... ஹிந்துஸ்தானி  இசை சாயலில் நடனப்பாடல்கள், காதல் பாடல்கள், சோகப்பாடல்கள் எல்லாமே இசையை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடிய தரத்தில் அருமையாய் இருக்கும்.  “வாழ்க நீடூழி மன்னவா”. “ஜல் ஜல் ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்” போன்ற நாட்டிய பாடல்களுடன் “இதுவே வாழ்வின்ஆனந்தமே” என்ற ஒரு மெல்லிய டூயட்டும் பி.பி.எஸ், மற்றும் பி.சுசீலா குரல்களில் இனிமையாக ஒலித்தது. “மங்கள மேடை மாலை செல்வம்” என ஒரு திருமணப்பாடல் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி குரல்களில் ஒலித்தது. “ஏனோ ஏனோ எந்நாளும் இல்லாத ஆனந்தம்” என பி.பி.எஸ், பி.சுசீலா, S.ஜானகி குரல்களில் ஒரு சிச்சுவேஷன் பாடல் இடம் பெற்றன. ஜெயந்தி  சந்தோஷமாகவும், அஞ்சலி தேவி  சோகமாகவும் பாடும் சூழலுக்கு பொருத்தமாக அமைந்தது அந்த பாடல். இதே பாடல்கள் தெலுங்கிலும் அதே பாடகர்களால் அழகு பெற்றது.
        அஞ்சலி பிக்சர்ஸ் எடுத்த சில படங்கள் போதிய வெற்றி பெறாததால் அவர்கள் சோர்ந்திருந்த வேளையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுத்த படம் “சதி சக்குபாய்”. இப்படத்தில் எல்லாமே பக்திப்பாடல்கள் தான் என்றாலும் எல்லாமே அருமையாக இருக்கும். இப்படம் தமிழிலும் அதே பெயரில் வெளி வந்தது.. ஆனால் பாடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. “Niluma madhusudana என்று சில வரிகளே  வரும் ஒரு பாடலிலேயே மயங்கி போயிருக்கிறேன். ராமா இது நியாயமா என வழுக்கிக்கொண்டே போகும் குரலோடு கூடவே பயணம் செய்ய தோன்றும். “Ghallu Ghallumani Gajjalu Mroyaga”  பாடல் மிக பிரபலமான பக்தி பாடல். “Nanda Gopala Daya cheyara” என பி.சுசீலா அவர்களின் குரலில் கேட்கும் போது இனிமை பொங்கும். Jaya panduranga prabhoஎன மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இடம் பெரும் பாடல்களில் பக்தி மணம் கமழும்.  "aanadhi seyavara" என இனிமையான ஒரு பாடல் கேட்க வேண்டிய பாடல். இதைப்போலவே படம் முழுவதும் பாடல்கள், ஸ்லோகம், விருத்தம் என 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார் பி.சுசீலா. எல்லாமே மிக தரமான பாடல்கள். ஒரு முறையாவது கேட்டு அனுபவிக்க வேண்டியா பாடல்கள். எப்படியோ தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய இசையை கொடுத்த இசை அமைப்பாளர் ஆதி நாராயண ராவ் என நிருபிக்கும் பாடல்கள் இவை..
( தொடரும் ... ) 

YearLangMovieSongs
1954TeluguAnnadathaPralaya payothi jale
1954TeluguAnnadathajaya jagadeesa
1954TeluguAnnadathaontari vadane bhama
1955Tamilanarkaliandha naal thaan idhada
1955TeluguanarkaliAnda chandalu gani
1956Telugusuvarna sundariSambhO, naa mora vinavaa
1956Telugusuvarna sundariBommalamma bommalu
1956Telugusuvarna sundariJagadeeswara pahi parameswara
1956Telugusuvarna sundariNee needalona
1956Telugusuvarna sundariPiluvakura alugakura
1956Telugusuvarna sundariidhi naa jeevithaalaapana
1956Telugusuvarna sundariNaa Chittipapa
1957Tamilmanalane mangayin bhagyamjagatheeswaraa paahi 
1957Tamilmanalane mangayin bhagyamazhaikkadhe ninaikkadhe
1957Tamilmanalane mangayin bhagyamdevaa dayaipuriya vaa
1957Tamilmanalane mangayin bhagyamjOraana bommai paarunga
1957Tamilmanalane mangayin bhagyamkanne nee vaada
1957Tamilmanalane mangayin bhagyamneeye en vaazhvin nidhi
1957Tamilmanalane mangayin bhagyamthEsulaavudhe thEnmalaraalE
1959Tamiladhisaya penneena meena teeka jai jaama
1959Tamiladhisaya penneppo varuvaaro
1959Tamiladhisaya pennkalangatha ullamum
1959Tamiladhisaya pennunna nenachale kilikilukkuthu
1959Tamiladhisaya pennunthan jaalam sellathu
1959Tamiladhisaya pennvellinilave o vennilaave
1959TeluguPatiya Pratyaksha Daivam (D)devaa dayakara
1959TeluguPatiya Pratyaksha Daivam (D)jagatheeswaraa, paahi paramEswaraa in telugu
1960Tamiladutha veetu pennelelo elelo (mannava vaa)
1960Tamiladutha veetu pennenakkaaga neeye raja
1960Tamiladutha veetu pennkanni thamizh manam vEsuthadi
1960Tamiladutha veetu pennmalarkodi naane maghiznthiduvEnE
1960Tamiladutha veetu pennpremayin jyothiyinale
1960Telugurunanubandhamlokala nele pathos
1960Telugurunanubandhamlokala nele challanayya
1960Telugurunanubandhamnindu punnami nila
1960TelugurunanubandhamRavela andala bala
1960Telugurunanubandhamandalu chinduganu
1960TelugurunanubandhamOh jagiri (deepavali no)[1]
1960Telugurunanubandhamehe ehe neelu thodali
1962Tamilmangayar ullam mangadha selvamEnO EnO ennalumilla aanadham
1962Tamilmangayar ullam mangadha selvamIdhuvE vaazhvin aanandhamE
1962Tamilmangayar ullam mangadha selvamjall jall jall salangai jathi
1962Tamilmangayar ullam mangadha selvammangala medai maalai selvam
1962Tamilmangayar ullam mangadha selvamvarumo idhu pol orunaal
1962Tamilmangayar ullam mangadha selvamarugil varai
1962Teluguswarna manjarimai maripinche ee soguru
1962Teluguswarna manjarichootham rare chooda
1962Teluguswarna manjariEdhiye jeevithanandhamu
1962Teluguswarna manjariMadhuramaina guru deevena
1962Teluguswarna manjarijanana janana
1962Teluguswarna manjariemo emo ethalona
1962Teluguswarna manjaridarali rava mahadeva
1965Telugusathi sakhubaighallu ghallumani
1965Telugusathi sakhubaiPrabho dayanaanide
1965Telugusathi sakhubaiJaya panduranga prabhu
1965Telugusathi sakhubaiJaya panduranga -ver2
1965Telugusathi sakhubaijegela gopala baala
1965Telugusathi sakhubailokha sikkalenu
1965Telugusathi sakhubainamoshanthaya
1965Telugusathi sakhubainiluma madhusudana
1965Telugusathi sakhubaiprabho vithobha neevuvina
1965Telugusathi sakhubaisreerama
1965Telugusathi sakhubairanga ranga naa aasey
1965Telugusathi sakhubaiswamee aanathi seyavaya
1965Telugusathi sakhubaivachinadava krishna
1965Telugusathi sakhubaiyamuna vihara vitala
1965Telugusathi sakhubaiveda sikhalan velugonda
1965Telugusathi sakhubaisharma padajala parakidi(padyam)
1965Telugusathi sakhubaivenna paalaaraginchi (padyam)


( தொடரும் )