பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 மார்ச், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.-பாகம் 1





     சங்கர்-கணேஷ் என்ற இரட்டையர்கள் தேவர் அவர்களால் இசை அமைப்பாளர்களாக அறிமுகம் செய்து வைக்க பட்டவர்கள். இதில் சங்கர் அவர்கள் இசைமேதை C.R.சுப்பராமன் அவர்களின் சகோதரர். இவர்கள் இருவரும் 1964-ல் இருந்தே எம்.எஸ்.வி-ராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளர்களாக பணி ஆற்றி வந்தார்கள். இசைகோர்வை பற்றி அங்கே தான் கற்றுக்கொண்டார்கள். 

     1967-ல் ஜெயலலிதா நடித்த “மகராசி” என்ற படத்தின் மூலமாக இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள். 1965-ல் ஜெயலலிதா நடத்திய நாட்டிய நாடகத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர் கணேஷ் என்ற காரணத்தால் ஜெயலலிதாவும் இந்த இரட்டையர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க சிபாரிசு செய்தார். பின்னர் ஜெயலலிதா நடித்த “வந்தாளே மகராசி” என்ற படத்துக்கும் சங்கர் கணேஷ் இசை அமைத்து இருக்கிறார்கள்.
   சங்கர் கணேஷ் எத்தனை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்கும் இல்லை. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்ததாக சொன்னாலும் போதிய அளவுக்கு ஆதாரம் இல்லை. இருந்தாலும் எண்பதுகளில் இளையராஜாவுக்கு அடுத்த படியாக அதிக  படங்களுக்கு இசை அமைத்தவர் இவர் தான் என நினைக்கிறேன். சின்ன பட்ஜெட் படங்களில் இவர் பங்கு அதிகமாக இருந்தது. குறைந்த கால அவகாசத்தில் குறைந்த செலவில் பாடல்களை அளிக்கும் திறமை இவர்களுக்கு இருந்தது. அதிகம் பந்தா இல்லாமல் எல்லோரிடமும் இணக்கமாக செல்லும் குணம் இவர்களுடையது.

      சங்கர் கணேஷ் திருமணத்தில் பி.சுசீலா அவர்கள் கணவருடன் .


    பி.சுசீலா பிரதான பாடகியாக இருந்த கால கட்டத்தில் தான் இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அதனால் இவர்களது ஆரம்ப கால படங்களில் பி.சுசீலாவின் குரல் ஆதிக்கம் நிறைய படங்களில் இருந்தது. பின்னர் வாணி ஜெயராமின் அறிமுகத்துக்கு பின் பல படங்களில் இவர் வாணி ஜெயராமின் குரலை பயன் படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக எண்பதுகளில் வாணியின் குரலை இவர்கள்  இசை அமைத்த படங்களில் அதிகம் கேட்க முடிந்தது. என்றாலும் பி.சுசீலாவின் குரலையும் ஒரளவு உபயோகித்து வந்திருக்கிறார்கள். பி.சுசீலா இவர்கள் இசையில் நானூறு பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது சிறப்பு.
    எம்.ஜி.ஆர் நடித்த “நான் ஏன் பிறந்தேன்”. “இதய வீணை” போன்ற படங்கள் இவர்களுக்கு பெரிய திருப்புமுனை. அதற்குப்பின் தேவரின் “ஆட்டுக்கார அலமேலு” திரைப்படம் ஒரு பெரிய ப்ரேக் ஆக அமைந்தது. அதற்கு பின்  இவர்களுக்கு ஏறுமுகம் தான். இதில் கணேஷ் ஆறேழு படங்களில் கதாநாயகனாக கூட நடித்திருக்கிறார்.
·         பி.சுசீலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட சங்கர் கணேஷுக்காக வீல் செயரில் அமர்ந்து கொண்டே ஒரு பாடலை ரிக்கார்ட் செய்து கொடுத்தார். இதை கணேஷ் ஒரு பேட்டியில் நன்றியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

·         பி.சுசீலாவின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தினார் கணேஷ் அவர்கள்.. பி.சுசீலாவுடன் இணைந்து “ரோஜாமலரே ராஜகுமாரி” பாடலை மேடையில் பாடினார்.

·         பி.சுசீலாவுடன் இணைந்து திரைப்படங்களிலும் பாடி இருக்கிறார். உதாரணமாக, "நீ ஒரு மகாராணி" படத்தில் இடம் பெற்ற  "பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்" பாடலை குறிப்பிடுகிறேன். இந்த பாடல் காட்சியில் சங்கர் கணேஷ் இருவருமே தோன்றுகிறார்கள். 

·         பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்த செய்தி கேட்டதும் நேரில் வந்து வாழ்த்தியவர்களில் இவரும் ஒருவர்.

·         1967-இல் இவர்கள் இசை அமைத்த முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். இந்த பயணம் 2015 வரை தொடர்ந்திருக்கிறது. 2015-இல் கணேஷ் இசை அமைத்த “சுவாமி ஐயப்பன்” என்ற இசை ஆல்பத்தில் “என்ன சொல்லி பாடுவது” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஒருவர் இசையில் பாடுவது என்பது பி.சுசீலா போல சிலருக்கே அமைந்த வரம்.

          



         இனி சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய சில வித்தியாசமான பாடல்களை பார்க்கலாம். அவர்கள்
1.       எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது  ( காலம் வெல்லும் ). வில்லன்களை மயக்குவதற்காக கதாநாயகி பாடும் பாடல். Western இசையில் ஒரு மயக்கமும் துள்ளலுமாக அந்த பாடலை பி.சுசீலாவை பாட வைத்திருப்பார்கள் சங்கர் கணேஷ் அவர்கள்.

2.       விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா ( மாணவன் ). விடலை பருவத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்களான கமலும், குட்டி பத்மினியும் ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியுமாக பாடி களிக்கும் Campus பாடலை டி.எம்.எஸ்சும், பி.சுசீலாவும் இணைந்து ஜாலியாக பாடி இருப்பார்கள்.

3.       அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்:(அவள்) குடித்துக்கொண்டே போதையுடன் பாடுவது போல் பி.சுசீலா பல பாடல்களை பாடி இருக்கிறார். உதாரணமாக  “உன்னை கண் தேடுதே”, “உருண்டோடும் நாளில்”. “ஜவ்வாது மேடையிட்டு” போன்ற பல பாடல்கள் இருந்தாலும். இது கொஞ்சம் வித்தியாசமான பாடலாக அமைந்தது.
     
4.       நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்” ( இதய வீணை) விரஹம தொனிக்கும் பாடலை அதுவும் குளித்துக்கொண்டே பாடுவது போல் காட்சி அமைப்பு இருந்தது. நீர் தொடும் போதும்.நீ தொடும் போதும் தோன்றும் சிலிர்ப்பை குரலில் கொண்டு வந்திருப்பார் பி.சுசீலா. கொஞ்சம் கூட ஆபாசமே தோன்றாமல், தேவையான இடத்தில் ஹஸ்கி வாயிஸில் திறம்பட பாடியிருப்பார் கானக்குயில்.


  
5.       அட தட்டிக்கேட்க ஒரு ஆளில்லாமல் ( வந்தாளே ஒரு மகராசி ). பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பேசும் ஒரு பாடல். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வும் கூட இதே போல் துணிச்சலாகவே அமைந்தது வரலாறு.
   
6.       இல்லை என்பான் யாரடா ? (அன்னை அபிராமி) நாத்திகர் குரல் கடவுள் எங்கே என கேட்கும்? அதற்கு பதிலான  ஆத்திகர்கள் குரல் தான் இந்த பாடல்.  


7.       ஓல்ட் எல்லாம் ஓல்டு உன் மண்ட பால்டு ( ஓடி விளையாடு தாத்தா) பி.சுசீலாவின் குரலில் வந்த நகைச்சுவை கலந்த பாடல். எழுபதுகளில் அடிக்கடி இப்பாடல் ரேடியோவில் ஒலிக்கும். பி.சுசீலாவின் குரலில் வெளிவந்த வித்தியாசமான பாடல்களில் இதுவும் ஓன்று.  

8.       எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேல (அதை விட ரகசியம்). 70-களில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டலில் அடிக்கும் கூத்தும் கும்மாளமும் எப்படி இருந்தது என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

9.       ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம் ( இன்ஸ்பெக்டர் மனைவி ) பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும் இன்னொரு வித்தியாசமான பாடல் இது.
    
10.   மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன். ( கோமாதா எங்கள் குலமாதா). இப்படத்தின் எல்லா பாடல்களையும் பி.சுசீலா மட்டுமே பாடினார். படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றன. அதை தவிர “பட்டும் படாமல்” என்ற பாடல் இசைத்தட்டில் வெளிவந்தது. கோமாதா எங்கள் குலமாதா என்ற பாடலைப்போல் பசுவின் பெருமையை உயர்த்தும் பாடலாக “அன்பு தெய்வம் என்ற பாடல் அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற “மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்” பாடல் கதையின் போக்கை திருப்பும் ஒரு பாடல்.


     இனி இவர்கள் இசையில் பி.சுசீலாவின் குரலில் வெளி வந்த ஹிட் பாடல்களை பார்க்கலாம்.

( Part 2 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக