பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 மார்ச், 2013

The most versatile P.Susheela


The most versatile singer P.Susheela:

   பாடகிகளிலேயே அதிகமான வித்தியாசமான பாடல்களை பாடியது யார் என கேள்வி வரும் போதெல்லாம் ஆஷா போஸ்லே, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி என பல பெயர்கள் உடனே பதிலாய் வரும். சுசீலாவும், லதாவும்  என்றால் Melody என்ற வட்டத்துக்குள் அப்படியே முடங்கி விடும். பி.சுசீலா அவர்கள் பல வெரைட்டியான பாடல்களை பாடி இருந்தும் அவர் பாடிய மெலடிகள் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தால் தானோ என்னவோ, மற்ற பாடல்கள் கொஞ்சம் அமுங்கி போய் விட்டது. பல மொழிகளில் பல பாடல்களை கேட்டு என்னால் ஒரு முடிவை எட்ட முடிந்தது. "P.susheela is the most versatile singer".

இனி என்னுடைய வாதங்களை வைக்கறேன்.

              Voice quality :
                   பாடுவதை தொழிலாய் கொண்ட பாடகிக்கு எந்த வகை பாடலானாலும். எந்த வயதினருக்கானாலும் பாடுகிற  மாதிரி ஒரு குரல் இருக்க வேண்டும். கள்ளத் தொண்டையில் பாடக்கூடாது. மேலே பாடும் போது நல்ல ரேஞ்ச் இருக்க வேண்டும். அத்தோடு குரலில் ஆழமும் இருக்க வேண்டும். மென்மையும் இருக்க வேண்டும். அதே நேரம் நல்ல கனமும் இருக்க  வேண்டும். குரலில் கனம்  இருந்தாலும் மெலடியை இழக்க  கூடாது. . இந்த விஷயத்தில் பி.சுசீலாவின் அருகில் கூட யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அத்தான் என்னத்தான், லவ் பேர்ட்ஸ் பாடல்களில் குரலில் இருக்கும்  மென்மை,  மன்னவன் வந்தானடி, ஜும்மந்தி நாதம் பாடல்களில் குரலில் கொடுக்கும் வலிமை, நடுத்தர வயதில் இருக்கும் பாத்திரங்களுக்கு பாடும் போது  குரலில் இருக்கும் திண்மை (அடி வண்ணக்கிளியே) என குரலில் பல வித்தியாசம் காட்டியிருப்பார்.  "ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு" பாடலில் மகளுக்கும், அம்மாவுக்கும் அவரே பாடியிருப்பார்.  குரலில் காண்பிக்கும் வித்தியாசத்தை பாருங்கள்.  

               Voice Clarity: 
                ஒரு பாடகி பாடும்  போது, அது எந்த வகை பாடலாக இருந்தாலும் வார்த்தைகள், சங்கதிகள் தெளிவாக கேட்கும் படியாக இருக்க வேண்டும். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் போன்றோர் பாடும் போது அந்த தெளிவை உணரலாம். நீங்கள் எந்த பழைய அல்லது புதிய டெக்னாலஜியை சேர்ந்த ஆடியோவில் கேட்டாலும் வார்த்தைகள் தெளிவாக கேட்கும். ஒரு உதாரணம் : "சொல்ல சொல்ல இனிக்குதடா "

               Expressions: 
                   பாடும் போது பாடலை உள்வாங்கி , உணர்வுகளை குரலில் வெளிக்கொணர வேண்டும். எங்கும் அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் காட்சியின் தன்மைக்கேற்ற மாதிரி பாட வேண்டும். பாடலைத்தாண்டிய  பாவமும், பாவமே இல்லாத பாடலும் நீண்ட நாள் நிற்பதில்லை. பி.சுசீலா அளவுக்கு உணர்வுகளை யதார்த்தமாய் பாடலின் வாரத்தை, அதன் அழகு கெடாமல் பாடியவர் இல்லை என்பேன். “சொன்னது நீதானா”வை கேளுங்கள். தேவையற்ற விம்மல், அழுகை, விசும்பல் எதுவுமே இருக்காது. குரலின் உள்ளில் இருக்கும் சோகம். ஆனாலும் வார்த்தைகள் தெளிவாய் இருக்கும். சந்தோஷம், அதிக சந்தோஷம், துக்கம், பெருந்துயரம், ஆணவம், வீம்பு, கம்பீரம், பயம்  என எந்த உணர்வானாலும் அதை பி.சுசீலாவின் குரல் அளவுக்கு யார் குரலும் கொண்டு வரவில்லை என்பேன். உதாரணமாக ஒரு நிகழ்வு. சில காரணங்களால் பி.சுசீலா கொஞ்ச நாள் பாடாமல் இருந்தார். அப்போது பிரபலமான டைரக்டர் கே.எஸ்.ஜி அவர்கள் "சித்தி"  என ஒரு படம் எடுத்தார். அதில் வரும் காலமிது காலமிது பாடலை பி.சுசீலா பாடினால் தான் ஜீவன் இருக்கும் என நினைத்தார். பி,சுசீலா மீண்டும் பாடும்  வரை காத்திருந்து   பாடலை ஒலிப்பதிவு செய்தார்கள் (அதற்காகவே முழு செட்டும் ரெண்டு மாதம் காத்திருந்தது) .  அத்தனை போட்டி பாடகிகள் இருந்தும், பி.சுசீலாவுக்காக  அவ்வளவு நாள் காத்திருப்பது என்பது ஒரு பாடகியின் தரத்துக்கான சான்று. "தென்றலில் ஆடை பின்ன" பாடலில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி உணர்வோடு பாடி இருக்கிறார்கள் கேளுங்கள். இப்படி எத்தனையோ சொல்லலாம்.   (பழம்பெரும் இசை அமைப்பாளர் கே,ராகவன் சொல்வதை கேளுங்களேன் . link )
                  
              Range:  
              ஒரு குரலின் தரம் என்பது குரல் மேலே பாடினாலும் , கீழே பாடினாலும் அதன் stable ஆக இருக்க வேண்டும். ஹை பிட்ச் என்றால க்ரீச் என்று கத்துவதோ, கீழே வந்தால் ஆண் குரல் போல கேட்பதோ ஒரு நல்ல தரமான குரல் அல்ல. அந்த வகையில் பி,சுசீலாவின் குரல், மேலே பாடும் போதோ, பேஸில் பாடும் போதோ அதன் தரத்தை இழந்ததே இல்லை. மேல் ஸ்தாயில் பாடும் பாடகிகளுக்கு பேஸில் பாட வருவதில்லை. அவர்கள் குரல் அப்படி. பேஸில் பாடும் பாடகிகளுக்கு மேல் ஸ்தாயி எட்டுவதில்லை. அதை பேலன்ஸ் செய்கிற அழகான குரல் பி.சுசீலாவுடையது மட்டுமே. (பாடகர் ஜெயச்சந்திரன் சொல்வதை கேளுங்களேன்  Link )

            Breathe control: 
            பல பாடல்களில், ஆலாபனைகளில் பி.சுசீலாவின் சுவாசம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என புரியும். காலத்தை வென்றவன் பாடலில் வரும் கடைசி ஹம்மிங், உன்னழகை கன்னியர்கள் பாடலில் வரும் ஹம்மிங் என பல உதாரணங்களை சொல்லலாம். யாராலாவது THEEYANAINA OOHALA பாடலை முயற்சியாவது பண்ண முடியுமா பாருங்கள்  !!??

                                   ஒவ்வொரு பாடகிக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். லதாவை பொறுத்தவரை அவர் ஆலாபனைகள், பாவங்களை சொல்வார்கள். இந்த சிறப்பு சுசீலாவுக்கு இருக்கிறதா என்றால்... ஆம்.. லதா பாடிய பெருமபாலான ஹிட் பாடல்களை பி.சுசீலா அதே போல் அல்லது அதை விட கொஞ்சம் சிறப்பாகவே பாடி இருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால். Lag jaa gale “ “naina baruseபாடல்கள்  (தமிழில் நானே வருவேன் மற்றும் பொன்மேனி தழுவாமல்) அதே தரத்தில் இருக்கும். "பொன்மேனி தழுவாமல்"  இன்னும் கொஞ்சம் நன்றாகவே இருக்கும். kuhoo kuhoo bole koyaliya பாடல் தமிழில் தேசுலாவுதே தேன்மலராலே என்ற பாடலின் ஹிந்தி வடிவம். அதை சுசீலா தான் முதலில் பாடினார். ஹிந்தியில் அதை பாடும் போது நான் சுசீலாவை  போல் பாடினேனா என கேட்டுக்கொண்டே இருந்தாராம். “கண்ணா கருமை நிற கண்ணா”வை லதா ஹிந்தியில் “கிருஷ்ணா ஓ காலே கிருஷ்ணா” என பாடினார். கேட்டு முடிவு செய்யுங்கள். . முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா ரெண்டு வெர்ஷனையும் கேளுங்களேன். "வளையோசை கலகலகலவென " பாடலை தெலுங்கில் பி.சுசீலா "பருவாலு கனிவினி" என பாடி இருக்கிறார், கேளுங்களேன். அவரின் சிறப்பு, சுசீலாவிடமும் இருக்கிறது என்பது என் வாதம்.  ஹிந்துஸ்தானி ராகங்களை லதாவைப் போலவே பி.சுசீலாவும் அழகாகவே பாடினார். "MADHURAMAINA GURU DEEWENA" ஒரு இனிமையான உதாரணம். வட இந்தியர்கள் பாடும் "ஜெயதேவ அஷ்டபதி"யில் ஒன்றான "Pralaya payodhi jale" பாடலை கேளுங்கள். ("பல்வகை பாடல்கள்" என தனி பக்கம் இருக்கிறது)  ஆனால் லதா தென்னிந்திய இசை வடிவங்களை  பாடி கேட்டதில்லை. சுசீலா பாடிய ஒரு ஹிந்தி பாடல் "sajna o sajna"

            ஆஷா போன்ஸ்லேக்கென ஒரு இடம். Melody  பாடினாலும், கூடவே துள்ளல் பாடல்கள். வெஸ்டெர்ன் பாடல்கள், மயக்கும் பாடல்கள், க்ளப் நடன பாடல்கள் என வித்தியாசங்களை காட்டினார். இந்த வகை பாடல்களில் பி.சுசீலா பரிமளித்திருக்கிறாரா? ஈனா மீனா டீகா (ஆஷா)என அவர் ஹிந்தியில் பாடினார். அதை பி.சுசீலாவும்  தமிழில்(ஈனா மீனா டீக்கா) பாடினார்.  maang ke sathhamara  என அவர் ஹிந்தியில் பாட “வாழ்விலும் கோரிக்கைபோலே” என பி.சுசீலா பாடினார். aajaa aajaa aajaa என ஆஷா பாட “அன்பே அன்பே அன்பே” என தமிழில் பி.சுசீலா பாடினார். இவை தவிர கிளப் டான்ஸ், மயக்கும் பாடலகள், டிஸ்கோ பாடல்கள் என பல வகையிலும் பி.சுசீலாவும் பாடி இருக்கிறார். 

              எஸ்.ஜானகியை பற்றி சிறப்பிக்கும்  போது “அவர் சிங்கார வேலனும் பாடுவார், நேத்து ராத்திரி யம்மாவும் பாடுவார், குழந்தை குரலிலும் பாடுவார். வயதான குரலிலும் பாடுவார்” என குறிப்பிடுவர். சிங்காரவேலனே தேவாவில் என்ன விசேஷம்? ஒரு சிருங்கார பாடல்  தானே. இன்றைய பத்து வயது குழந்தை கூட அதை ஸ்டேஜில் எளிதாக பாடுகிறதே. அப்படி என்ன விசேஷம்?  நாதஸ்வரம் பிட்ச்-இல் பாடுவது தான் அப்பாடலின் சிறப்பே.. இயல்பாகவே ஹை-பிட்ச் (soprano) வகையை சார்ந்த எஸ்.ஜானகியின் குரலில் அது எளிதாக சாத்தியப்பட்டது.  அருமையாக பாடி இருப்பார். படம் தோல்வி அடைந்தாலும், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது  அப்பாடல். சுசீலா இதற்கு இணையாக பாடி இருக்கிறாரா என்றால் ... ஆம்.. அது சாத்தியப்பட்டு இருக்கிறது. அதே நாதஸ்வரம் இசைக்கு  இசைந்த குரலாய் “நலந்தானா நலந்தானா” என பி.சுசீலா பாடி இருக்கிறார்... அதில்  வெறும் ஒரு சிருங்கார பாடல் அல்ல. அதில் ஒரு காயம் பட்ட பறவையின் வலி இருக்கும். இயலாமை, ஆறுதல், துடித்தல்  என பல உணர்வுகளின் கோர்வை அது.. இப்போதும் மேடைகளில் யாரும் பாடுவதற்கு துணியாத ஒரு பாடலது......  அடுத்தது , "நேத்து ராத்திரி யம்மா".  அதை "நின்ன ராத்திரி யம்மா" என பி.சுசீலா தெலுங்கில் பாடி விட்டார். அடுத்தது குழந்தைக்குரல்... குழந்தை குரலில் பாடுவது எஸ்.ஜானகிக்கு எளிது. ஏனென்றால் அவர் குரலே மிக மெல்லிய குரல்.  ( குழந்தை குரல், ஆண்குரல் எல்லாம் gimmics என்பது என் வாதம்.  ஆனால் எஸ்.ஜானகி பாடுவதை கேட்டவுடன், இப்படித்தான் குழந்தை பாடும் என நம்ப முடிவது தான் அவரது வெற்றி  ). ஒரு பாடகி இசை அமைப்பாளர் சொல்வதை பாட வேண்டும் என்பதால், gimmics  செய்தால் கூட அது அவர் தவறு இல்லை. அதனால் அந்த புகழுக்கு எஸ்.ஜானகி தகுதி ஆனவர் தான்.  பி.சுசீலாவும் குழந்தை போல குரலை மாற்றி பாடி இருக்கிறார். ஒரு உதாரணம் “சின்னாரி பொன்னாரி சிட்டிப்பாப்பா”. வயதான குரலிலும் பாடி இருக்கிறார்  வள்ளிக்கணவன் பேரை , " NEE MAGUMOMU " போன்றவை உதாரணங்கள். ஆண்குரலில் பாடியதில்லை என்றாலும், குரலை மாற்றிப்பாடி இருக்கிறார். (ஒ லாலி ஒலாலி). எஸ். ஜானகி பாடிய எல்லா வெரைட்டியும் பி.சுசீலாவின் குரலிலும் வந்திருக்கிறது.  இன்னும் அதிகமான  விளக்கங்களுடன் படிக்க இந்த லிங்கை அழுத்தவும். ( Link )
                                அதைப்போல் ஒரே பாடலில் இரு கதாநாயகிகளுக்கும் ஒருவரே குரல் கொடுக்கும் போது, இரு நடிகைகளுக்கும் குரலில்  காட்ட வேண்டிய வித்தியாசம் சவாலான ஒன்று தான். கொஞ்சம் மிமிக் பண்ணி குரலை மாற்றலாம். ஆனால் அந்த கேரக்டரின் தன்மைக்குள் நின்று அதை பாடுவது கொஞ்சம் சிரமமான விஷயம். காவிய தலைவி படத்தில் "ஒரு நாள் இரவு" பாடலில் அம்மாவுக்கும், மகளுக்கும் பாடும் போது, குரலில் காட்டும் வித்தியாசம் மிகவும் வியப்பானது. வயது வித்தியாசம் இருப்பதால் அதைக்கூட ஓரளவு பாடி விடலாம். ஆனால் "என்ன தான் ரகசியமோ" பாடலில் ஒரே வயதுள்ள இரு கதாநாயகியருக்கும் பாடுகிற சூழ்நிலையில், அந்த  கேரக்டரின் தன்மை உணர்ந்து அதற்கேற்றாற்போல் பாடியிருப்பார் பாருங்கள்.! அசத்தல் ! !. இருவரும் நல்ல குடும்பத்து பெண்கள். ஒருவர் தன கணவன் மீதுள்ள அன்னியோன்யத்தை காதலுடன் பாட, இன்னொருவர் அவனை கவர முயற்சிக்கும் வகையில் நடனமாடி பாடுவார். இரண்டு குரல்களுக்கும் அப்படி ஒரு வித்தியாசம் காண்பித்து இருப்பார் பி.சுசீலா  அதிலும் ஒரு கேரக்டரில் இருந்து இன்னொரு கேரக்டருக்கு குரலை மாற்றும் இடம்.. அப்பப்பா.!!.மிமிக்ரி செய்யாமல் குரல் வளத்தால் மட்டுமே அதை செய்து காட்டினார் பி.சுசீலா அவர்கள். 
                                எல்.ஆர்.ஈஸ்வரிக்கு அப்படி ஒரு வித்தியாசமான குரல். நன்றாக வாயைத்திறந்து முழு தொண்டையில் பாடக்கூடியவர். காதோடு தான் நான் பாடுவேன், முத்துக்குளிக்க வாரீகளா, பட்டத்து ராணி, எலந்த பழம், ஆட வரலாம், பளுங்கினால் ஒரு மாளிகை என பல விதமான பாடல்கள் பாடி இருக்கிறார்.  "செல்லாத்தா எங்க மாரியாத்தா" என சாமி பாடல்களும் அவர் பாடி பிரபலம். அப்பாடல்களை அவர் போல் யாராலும்  பாட முடியாது எனபது போல் ஒரு தனித்துவம் இருக்கும். வெஸ்டெர்ன், க்ளப் டான்ஸ் என்றால் அவர் தான் ராணி. இதற்கு இணையாக பி,சுசீலா பாடி இருக்கிறாரா? இதை கேளுங்களேன் “லோகுட்டு பெருமாளு கெருக்கா”. பி.சுசீலாவின் குரலில்,  எல்.ஆர்..ஈஸ்வரியின் குரலில் வரும் துள்ளல், குறும்பு, சிணுங்கல் கேட்கிறதா? இது மட்டும் தானா? இலந்தப்பழம் தெலுங்கில் கேட்டிருக்கிறீர்களா ( ரேகி பள்ளு ரேகி பள்ளு). எப்படி?   பட்டத்து ராணி போல் ஒரு பாடல் கூட நான் தெலுங்கில் கேட்டிருக்கிறேன். இவை போக, ஒரு குறும்பு பாடல் “நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்”. ஒரு மயக்கும் பாடல் “அடிமை நான் ஆணையிடு”. ஒரு க்ளப் டான்ஸ் பாடல் “Night Queen”. போல பல வித்தியாசமான பாடல்கள் அதே வடிவில் வெளிவந்து இருக்கிறது. சுராங்கனி பாடலை தெலுங்கில் "ஓ ரோஜுலு ஃபோஜூலு" என்று பாடுகிறார் சுசீலா.  ஈஸ்வரி பாடுவது போல் இன்னொரு பாடல்  " எல்லோரும் திருடர்களே"  இவ்வகைப்படல்களுக்கும்  பி.சுசீலாவின் குரல் ஈடு கொடுக்கிறது.  ஆனால் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "தேடினேன் வந்தது" போல துள்ளலும், இனிமையும் ஒன்றாய் கலந்த பாடல்கள் வேறு குரல்களில் இத்தனை அழகாய் வந்ததில்லை. 
     அதைப்போலவே அம்மன் பாடல்களும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சிறப்பாக அமைந்தன. அதற்கு காரணம் அவரின் குரலில் இருக்கும் Throw. அதைப்போலவே "கண்ணபுர ஊராத்தா" , "மாயி  மகமாயி" போல பல  பாடல்களில் பி.சுசீலாவும் கலக்கி இருப்பார். அதே நேரம் "மாணிக்க வீணை ஏந்தும்" போன்ற பாடல்களில் பி.சுசீலாவின் குரலில் கிடைத்த முழுமை மற்ற பாடகிகளிடம் கொஞ்சம் குறைவே.  

                         பி.லீலா அவர்கள் கர்நாடக இசையில் கை தேர்ந்தவர்கள். ஒரு கனமான குரல் அவருடையது.  அவருடன் சேர்ந்து ஜகம்புகழும் புண்ய கதை ராமனின் கதையே  , ஸ்வாகதம் ஸ்வாகதம் போல் பல பாடல்களை அவருக்கு இணையாக பாடி இருக்கிறார். அதைப்போலவே சூலமங்கலத்துடன் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்", எஸ்.வரலக்ஷ்மியுடன் "திருமல திருப்பதி வெங்கடேஸ்வரா" போல பல பாடல்களிலும் அவர்களுக்கு இணையாக பாடி இருக்கிறார்.  

     மற்றவர்களின் குரலில், பாடுவதில் இருக்கும் குறைகளை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. சிலருக்கு பேஸில் பாட வராது. சிலருக்கு ஹை-பிட்ச் வராது. சிலருக்கு மென்மை வராது. சிலருக்கு கம்பீரம் வராது. ஆனால் எல்லாம் இணைந்த ஒரு குரல், எந்த வகை பாடலானாலும் அதை கையாளும் நேர்த்தி என பி.சுசீலா பல படிகள் முன்னாலே நிற்கிறார்.


2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு..சுசீலாம்மா அவர்களின் பண்முகத் திறமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகுந்த ஆதாரங்களுடன் தெளிவான பார்வையை வெளிப்படுத்தும் வகையில் பதிவு அமைந்துள்ளது..அருமை..அருமை..

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான பதிவு. கலைமகளின் அவதாரம் தான் பி. சுசீலாம்மா.

    பதிலளிநீக்கு